தேவனுக்கே மகிமையுண்டாவதாக
வெளிப்படுத்தல்: 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
தேவன் இஸ்ரவேல் நடுவில் எழுந்தருளுகிறார்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நம்முடைய தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் நடுவில் சீனாய் மலையில் இறங்குகிறதை நாம் தியானித்தோம்.
கர்த்தர் சீனாய் மலையில் இறங்கிய போது மோசேயை கொடுமுடியில் வரவழைத்தார் மோசே ஏறிப் போனான்.
யாத்திராகமம்: 19:21,22
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மலையின் கொடுமுடி என்று சொல்லும் போது பரிசுத்தமான ஒரு வாழ்க்கை பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் சமூகம் என்பதற்கு திருஷ்டாந்தப்படுத்தியது சீனாய் மலை. அங்கு எல்லோரும் பரிசுத்தம் குறைவு உள்ளவர்கள் சொல்ல முடியாது. ஆனால், கர்த்தர் மோசேயை மாத்திரம் வா என்று அழைக்கிறார். கர்த்தரின் சமூகத்தில் வருகிற ஆசாரியர்களும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜனங்கள் யாருக்குமே சீனாய் மலையில் ஏறி செல்ல முடியாது. என்னவென்றால் மலையை சுற்றிலும் எல்லையை குறித்து பரிசுத்தப்படுத்தி கொள்ளுங்கள் என்று சொன்னதால் மட்டும் போக முடியாது.
ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, நீ இறங்கி போ, நீயும் ஆரோனும் கூடி ஏறி வாருங்கள். ஜனங்கள் சங்காரமாகாதபடி எல்லையை கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக் கடவர்கள் என்றார்.
அப்படியே மோசே அதை ஜனங்களிடத்தில் சொன்னான்.
மேலும் ஜனங்கள் மோசே மூலம் தான் தேவனிடத்தில் போக முடியுமாயிருந்தது. அதற்கு தேவன் ஒரு சீனாய் மலையை கொண்டு வருகிறார், அதில் இறங்குகிறார். அந்த சீனாய் மலை தான் கிறிஸ்து. இனி கிறிஸ்து மூலம் நம்மை பரிசுத்தப்படுத்தி தேவனிடத்தில் சேரும் படியாக தேவன் சீனாய் மலையை சுற்றிலும் எல்லையை குறித்து அதை பரிசுத்தப்படுத்த சொல்கிறார்.
நம் வாழ்க்கையில் கிறிஸ்து போடுகிற எல்லையை தாண்டி யாரும் போக முடியாது என்பதை நமக்கு விளக்கிக் காட்டுகிறார். ஆனால் மோசே தேவன் சொல்லிய வார்த்தைகளை ஜனங்களுக்கு சொல்கிறான்.
யாத்திராகமம்: 20:2
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
இந்த வேத வசனத்தை நாம் தியானிக்கும் போது உன்னை என்று எழுதப்பட்டிருக்கிறது இஸ்ரவேல் சபை (கிறிஸ்து). எல்லா ஜனங்களும் ஒரே இருதயம் இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகிறது. இதைத்தான் புதிய நியமத்தில் தேவன்,
மத்தேயு: 2:20,21
நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத் தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.
அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.
இது சபை எகிப்திலிருந்து இஸ்ரவேலுக்கு வரவேண்டும் என்பதை தேவ தூதர் மூலம் தேவன் சொல்லுகிறார்.
என்னவென்றால் நம் ஆத்துமா எகிப்து, அங்கு கிறிஸ்து பிறந்தால் அங்கே எகிப்தின் கிரியைகள் சகலத்தையும் விட்டு விசுவாச யாத்திரை இஸ்ரவேலுக்கு போகவேண்டும் இஸ்ரவேல் தேசம் தான் கானான். கானானில் கிறிஸ்து மகிமை படுவார். அது பாலும், தேனும் ஓடுகிற தேசம். நம் ஆத்துமா அவர் தான் புதிய எருசலேம். தேவன் சொல்கிறார்,
யாத்திராகமம்: 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
இவ்விதம் இஸ்ரவேல் சபை எகிப்திலிருந்து மீண்டெடுத்தால் உள்ளத்தில் தேவனையன்றி வேறே எந்த எண்ணத்திற்கும் முக்கியமான இடம் கொடுக்கக் கூடாது என்பது முக்கியமான கட்டளையாக இருக்கிறது இவ்விதம் தேவன் ஜனங்களோடே பேசும் போது ஜனங்கள் பயப்படுகிறார்கள்.
யாத்திராகமம்: 20:18
ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம் செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார் மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
ஜனங்களிடம் தேவன் பேசும் போது, இடிமுழக்கம், மின்னல், எக்காள சத்தம், மலை புகைகிறதை இவ்வித காரியம் நடக்கிறது என்றால், அங்கு ஆலயம் திறக்கப்படுகிறது. எப்படியென்றால் தேவன் நம் உள்ளத்தில் எழுந்தருளுகிறார். நம் உள்ளத்தில் நம்மோடு பேசுகிறார். அன்று சீனாய் மலையிலிருந்து பேசின தேவன் சீனாய் மலை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரில் கூட நம்மோடு பேசுகிறார் தேவன். அப்போது கிறிஸ்து தான் தேவாலயம் அந்த ஆலயம் பரலோகத்தில் காணப்படுகிறது இவையெல்லாம் நம் உள்ளம் தான் என்பதை நாம் புரிந்து கொண்டு நம்மை எப்போதும் பரிசுத்தமாக்கி கொள்ள வேண்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் உயிர்தெழும் போது அங்கு எக்காள சத்தம் தொனிக்கிறது. பரலோகத்தில் தேவாலயம் திறக்கப்படுகிறது. அங்குள்ள புகை என்னவென்றால் பாபிலோன் வேசி நம்மளில் தங்கியிருந்தால் அவள் கர்த்தருடைய அக்கினியில் வேகிறதினால் அந்த புகை அங்கிருந்து எழும்புகிறது.
பிரியமானவர்களே இதனை பற்றிய விளக்கம் நாளை கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம். இவ்விதம் நம் வாழ்வில் மாற்றங்கள் வரவும் கர்த்தர் எழுந்தருளவும் நாம் யாவரும் ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.