மூழ்கி ஞானஸ்நானம் முக்கியம்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Sep 05, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

மத்தேயு: 3:17

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.        

அல்லேலூயா.

 மூழ்கி ஞானஸ்நானம் முக்கியம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் தியானித்த வேத பகுதியில் இஸ்ரவேலர் எகிப்தின் துன்மார்க்கத்திலிருந்து (சமுத்திரம்) விடுதலையாகி மீட்கப்பட்ட போது தேவனை துதித்து ஸ்தோத்தரித்து கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? என்று பாடினதையும் மீரியாம் பிரதிவசனமாக கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்.     குதிரையையும், குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்றும் பாடினாள்.

மீரியாம் பாடின பாட்டு கர்த்தர் நம்மளில் இருக்கிற எகிப்தின் கிரியைகளை அகற்றி வெற்றி சிறக்க பண்ணுகிறார் என்றும் குதிரையையும், குதிரை வீரனையும், கடலிலே தள்ளினார் என்றால் உலக மேன்மை, உலக உத்தியோகம், உலக ஐசுவரியம், உலக அந்தஸ்து இவ்வித பூமிக்குரிய காரியங்களை மேன்மையாக எண்ணுகிறவர்கள் எகிப்தியர்கள் இவர்களை துன்மார்க்கத்தில் தள்ளிப் போடுகிறார்.         அதைத் தான் எகிப்தியனை கடலிலே தள்ளினார் என்று சொல்லப்படுகிறது அதனால் தான் தேவன் தானியேலுடைய தரிசனம் ஆத்துமாவைக் குறித்ததாக இருந்தது.      நம் உள்ளில் இருவித ஆத்துமாக்கள், நித்திய ஜீவன்,

நித்திய நிந்தை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தை உடைத்து பலவித கிரியைகளை நமக்கு செய்து மனந்திரும்பி தேவசித்தம் செய்வோமானால், நித்திய ஜீவனுக்கும், தேவ சித்தத்திற்கும் கீழ்ப்படியாமல் இருப்போமானால் நித்திய நிந்தைக்கு ஒப்புக்கொடுப்பார்.       நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் இதயத்தை திறக்கும் வரையிலும் நம் ஆத்துமா பூமியின் தூளில் நித்திரையாயிருக்கும் இந்த வேளையில் நம்மை நாமே சிந்திப்போம், எப்படியென்றால்,

வெளிப்படுத்தல்: 5:1-5

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் நம் பிதாவாகிய தேவன் அவர் வலது கரத்தில் இருக்கிற புஸ்தகம் நாம் ஒவ்வொருவரும் இந்த புஸ்தகத்தின் உள்ளும், புறம்பும் எழுதப்பட்டிருக்கிறது.       நம் இருதயம் ஏழு  முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது.

நம் இருதயம் யாராலும் திறக்கமுடியாத ஒரு புஸ்தகம் என்பது தெரிகிறது.        அதை திறக்க வானத்திலோ, பூமியிலோ பூமியின் கீழாவது ஒருவராலும் அதை திறக்கவோ பார்க்கவோ முடியாது. மனுஷனுடைய இருதயம் யாராலும் உள்ளால் பார்க்க முடியாதது தான். ஆனால் அந்த புஸ்தகத்தை கண்டபோது யோவான் சொல்கிறான் அதை திறக்க முடியாததால் அவன் அழுகிறான்.

அழுகிற சத்தம் கேட்டு சிங்காசனத்தின் சுற்றிலும் இருக்கிற இருப்பத்து நான்கு மூப்பர்களில் ஒருவன் அழவேண்டாம், யூதா கோத்திரத்து சிங்கம் தாவீதின் வேருமானவர் புஸ்தகம் திறக்கவும், அதின் ஏழு முத்திரைகளை உடைக்கவும் ஜெயம் கொண்டவர் என்றான்.

பிரியமானவர்களே தேவனுடைய வார்த்தையானது மகிமையாகிய கிறிஸ்துவாக நம் உள்ளத்தில் தோன்றுகிறார்.       அவர் உள்ளத்தில் தோன்றினால் மாத்திரம் போதாது பூரண வளர்ச்சியடைய நாம் இடம்கொடுக்க வேண்டும்.      நாம் எப்படி இடம் கொடுப்போம் நம் கிறிஸ்து தோன்றினாலே ஏரோது கொலை செய்ய வகை தேடுவான். ஏரோதின் கண்களில் படாதபடி  நாம் ஒவ்வொரு நாளிலும் காத்துக் கொண்டு எருசலேமில் இருக்க வேண்டும்.      அவருடைய பரிபூரணத்தினால்  நிறைய வேண்டும்.

யோவான்: 1:16

அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.

அவர் நம் உள்ளத்தில் கிருபையில் வளருவோமானால் மாத்திரமே நம் பாவ உணர்வு உண்டாகும், பாவ உணர்வு உண்டானால் நாம் மன்னிப்பு பெற்றுக்கொள்ளமுடியும்.     மன்னிப்பு பெற்றுக் கொண்டால் நமக்கு மனம் திரும்புதல் உண்டாகும்.     மனந்திரும்புதல் என்றால் நம் உள்ளத்தில் தேவன் பேரில் விசுவாசம் விசுவாசம் வந்தால் நமக்கு வெற்றியும் கிடைக்கும்.     இந்த வெற்றியானது கிறிஸ்துவோடு பற்றி சேருதல்.     கிறிஸ்துவோடு பற்றி சேர்ந்தால் நமக்கு தைரியம் கிடைக்கும்.     தைரியம் கிடைத்தால் ஞானம் உண்டாகும்.     ஞானம் உண்டானால் இச்சையடக்கம் கிடைக்கும்.     இச்சையடக்கம்  பொறுமையை உண்டாக்கும். பொறுமை  தேவ பக்தியை உண்டாக்கும்.     தேவ பக்தி உண்டானால் சகோதர சிநேகம் கிடைக்கும் . சகோதர சிநேகத்தோடே அன்பை கூட்டி வழங்க முடியும்.     அன்பை கூட்டி வழங்குகிறது என்றால் தேவனுடைய கற்பனையை கைக்கொள்வோம்.

தேவனுடைய கற்பனையை கை கொள்ளுகிற இருதயம் நமக்கு உண்டானால் நாம் நிச்சயமாக கிறிஸ்து நடந்து காட்டின மாதிரி போல் நடக்க நாம் கற்றுக்கொள்வோம்.

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால் உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.

இப்படி விசுவாசம் உண்டானால் கிறிஸ்து நடந்து காட்டின மாதிரி நமக்கு பின்பற்ற நம் இருதயம் தூண்டிக் கொண்டிருக்கும்.

பரிசுத்தம் நம் வாழ்க்கையில் முக்கியம் என்ற உணர்வு வரும் அப்போது பரிசுத்தம் பெறும்படியாக அவர் பாதையில் நடப்போம்.     அவ்விதம் நடக்க விரும்பினால் நிச்சயமாக அவரோடு இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கைக்குரிய ஞானஸ்நானத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற வாஞ்சை வரும். அந்த வாஞ்சை வருவதற்கும், வாஞ்சை  வந்தவர்கள் அதனை பெற்றுக் கொள்ளும் படியாகவும் ஒப்புக்கொடுப்போம்.        ஜெபிப்போம்.           கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                       

-தொடர்ச்சி நாளை.