தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 14:13-15
நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒரு போதும் ஆவிக்குரிய பெருமை வராமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு நம் உள்ளத்தில் அகங்கார எண்ணங்கள் வராதபடி ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 14:1-22
ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?
அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.
அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.
மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,
மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
மலைமுதலாய் விழுந்து கரைந்துபோம்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பேர்ந்துபோம்.
தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.
மேற்கூறிய வசனங்களில் யோபு சொல்வது என்னவென்றால் ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் வாழ்நாள் பூவைப்போல பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிற்காமல் ஓடிப்போகிறான். ஆகிலும் இப்படிபட்டவன் மேல் நீர் உம்முடைய கண்களை திறந்து வைத்து; உம்முடைய நியாயத்துக்கு கொண்டு போவீரோ? அல்லாமலும் அவன் சொன்னது அசுத்தமானதிலிருந்து சுத்தமானதை பிறப்பிக்கதக்கவன் ஒருவனுமில்லை. அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால் அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது என்றும் அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். மேலும் அவன் சொல்வது ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனை விட்டு விலக்கும் என்கிறான். அல்லாமலும் மேலே கூறபட்ட யோபுக்கூறிய வார்த்தைகள் என்னவென்றால் தேவன் ஒரு மனிதனை அல்லது இரட்சிக்கப்பட்டவர்களாகிய மனுபுத்திரனை இப்பூமியில் வைத்து அவன் வாழ்நாளில் என்ன செய்கிறார் என்றும்; இப்பூமியின் வாழ்வு கழிந்து என்ன செய்வார் என்பதனையும் அவன் அறிந்திருக்கிறதாக கர்த்தரிடத்தில் எடுத்து காட்டுகிறான். அதென்னவென்றால் தேவன் வைத்திருக்கிற மறைவான ரகசியங்கள் தனக்கு தெரியும் என்றும்; தன்னில் இருக்கிற பெருமையான எண்ணத்தினால் பேசுகிறான். இப்படியே அநேக கர்த்தரின் ஊழியக்காரர்களும் இவ்வண்ணமே பேசுகிறார்கள் என்பதனை கர்த்தர் யோபுவை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால்
பிரியமானவர்களே, கர்த்தருக்கு முன்பாக நாம் ஒன்றுமில்லை என்ற எண்ணம் உடையவர்களாக, நம்மை தாழ்த்தி, அவர் செய்யபோகிற காரியங்கள் கண்டுபிடிக்கக்கூடாத ஆழமான ஞானமாயிருக்கிறது என்பதனை உணர்ந்துக் கொண்டு, இதுவரையில் நம்மில் வந்துபோன தவறான கருத்துக்களை கர்த்தரின் பாதத்தில் பாவஅறிக்கைப்பண்ணி ஆத்துமாவின் புதிதாக்குதலை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.