தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 91:1

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா. 

மணவாட்டி சபையாகிய நமக்கு தேவன் உயர்ந்த அடைக்கலமானவர்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை என்றன்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 46:1-11 

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,

அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)

ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்.

ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.

அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

மேற்கூறபட்ட வசனங்களில் நம்முடைய வாழ்வில் தேவன் மணவாளனாகவும், நம்மில்  பரிசுத்த ஆவியானவர் மணவாட்டியாகவும் செயல்படும்போது தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையுமாகயிருந்து, எந்த போராட்டம்  வந்தாலும் நம் உள்ளத்தில் ஒரு நதியாக தேவன் வெளிபட்டு நம் இருதயத்தை சந்தோஷிபிக்கிறார்.  தேவன் நம் நடுவில் இருக்கும்போது நாம் அசையாதபடி நிலைத்திருப்போம்.  அதிகாலையில் தேவன் அதற்கு சகாயம் பண்ணுவார்.  ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது, தேவன் அவர் சத்தத்தை முழங்கபண்ணினார், பூமி உருகி போயிற்று (பாரம்பரியம் அழிக்கப்படும்) . இவ்விதமாக இருக்கும் போது கர்த்தர் நம்மோடிருந்து, யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.  இவ்விதமாக  கர்த்தர் எல்லா பாவ பழக்கவழக்கங்கள், பாரம்பரிய பழக்கங்கள், உலக வழிபாடுகள் எல்லாவற்றையும் ஓயப்பண்ணி, நாம் ஒவ்வொருவரும் கர்த்தரே தேவன் என்று அறிந்துக் கொண்டும், மற்றும் எல்லா ஜாதிகளுக்குள்ளும் கர்த்தரே உயர்ந்தவராயிருந்து, பூமியிலே உயர்ந்தவராயிருக்கிறார்.  இவ்விதமாக கர்த்தர் நம்மோடிருந்து, யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமாயிருக்கிறார்.  இவ்விதமாக தேவன் நதியாக நம் உள்ளத்தில் வந்து நமக்கு உயர்ந்த அடைக்கலமாயிருக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.